Self-care.png

உளநலத்தினை ஆரோக்கியமாக பேணுதல் : சுய-பாதுகாப்பு உத்திகள்

உங்களின் உளநலத்தைப் பேணி மீளெழும் ஆற்றலைப் பலப்படுத்துவதற்கு உங்களுக்குப் பல விடயங்களை செய்ய முடியும். அந்த வகையில், கீழே குறிப்பிடுகின்ற உத்திகளை முயற்சி செய்யுங்கள் :


உங்களின் உடலுக்கு உகந்ததைச் செய்யுங்கள் – அது உங்களின் மனதுக்கும் நன்மை பயக்கும்!


உங்களின் உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். உடற் பயிற்சியானது எம்மிடத்தில் நல்ல உணர்வினை ஏற்படுத்தவும் எமது மனவழுத்தத்தை நீக்கவும் உதவுகின்றது. நாம் உடல் ரீதியாக பலமாகவும் வலிமையுடனும் இருக்கும் போது, அது கஷ்டமான நிலைமைகளை சமாளிப்பதற்குத் தேவைப்படுகின்ற உடல் மற்றும் உள ரீதியான ஆற்றலை வழங்குகின்றது.

சுறுசுறுப்பாக இருங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 60 நிமிடங்களாவது சுறுசுறுப்பாக இருப்பதை வாழ்க்கையின் ஒரு இலக்காகக்கொண்டு செயற்படுங்கள். ஒரே நேரத்தில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்பதில்லை. உங்களின் இலக்கை அடைவதற்கு உங்களின் அன்றாட நடவடிக்கைகளை சற்று இடைநிறுத்தி தொடரலாம். உங்களுக்கு வெளியே செல்ல முடியுமாக இருந்தால் நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஏனைய விளையாட்டுக்களை முயற்சிசெய்யுங்கள். ஒவ்வொரு நாளும் உடலைக் கஷ்டப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. இயற்கையை இரசித்து இயற்கையுடன் இருப்பது உளநலத்துக்கு நல்லது.

  • உங்களுக்கு வீட்டினுள் இருக்க வேண்டுமென்றிருந்தால் நடனம், நீட்டற் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம், அல்லது வீட்டுப்பணிகளில் ஒத்துழைக்க முடியும்.
  • ஒரு நண்பருடன் இணைந்து உடற்பயிற்சி செய்வதினூடாக அதனைத் தொடர்ந்து பேணிவரலாம்.
  • உங்களுக்கு முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ணவும்.
  • இரவில் தூங்கும் நேரத்தை தொடர்ந்து பேணிவருதல். குறைந்தபட்சம் 8 மணித்தியாலங்கள் நித்திரைகொள்ள வேண்டும். அது 9 மணித்தியாலங்களாக இருந்தால் சிறந்தது.
  • நீங்கள் ஒரு நாள் நல்ல நாளாக அமையாவிட்டாலும் பற்துலக்கி, குளித்து, முடி சீவி அழகான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.
  • ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியைக் கற்று வழக்கமாக செய்துவாருங்கள். – அது எவ்வாறு என இங்கே அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என இனங்காண கற்றுக்கொள்ளுங்கள்.


நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என விளங்கிக்கொள்வது முக்கியமானது. கட்டிளம் பருவத்தில் பலவிதமான மனவெழுச்சிகளை உணர்வது சாதாரணமானது. ஒரே நாளில் நீங்கள் கவலை, விரக்தி, அதிர்ச்சி. அன்பு என்பவற்றை உணரலாம். உங்களின் உணர்வுகள், விஷேடமாக, உங்களை விஞ்சுவதாக உணர ஆரம்பித்தால் அவற்றை இனங்கண்டு அடையாளமிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது சிலவேளை உங்களுக்கு உங்களின் உணர்வுகள் பற்றி எழுதுவதற்கு உதவியாக இருக்கும். நாம் எந்தளவு எமது உணர்வுகளை அறிந்துகொள்கிறோமா அந்நளவு எங்களுக்கு அவற்றைக் கட்டுப்படுத்த முடிவதோடு உணர்வுகள் எம்மைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த முடியும்.


நேரான சிந்தனைகளும் உடன்பாடான உணர்வுகளும்.


நாம் சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்கும் விதம் நாம் உணரும் முறையில் தாக்கம் செலுத்துகின்றது. நாம் எதிர்மறையான எண்ணத்துடன் மட்டும் கவனக் குவிப்பினை மேற்கொள்ளும் போது நாம் தவறாகவே உணர்கின்றோம். நாம் தவறாக உணரும் போது எமக்கு விடயங்களின் எதிர்மறைப் பக்கத்தினை மாத்திரமே கண்டுகொள்ள முடியும். இது பயங்கரமானொரு சுழற்சியாகும்!

உங்களுக்கு சதாவும் நேரான சிந்தனையுடன் இருக்க முடியாது. என்றாலும், நல்ல விடயங்களைத் தேடி நோக்கும் போது எதிர்மறை உணர்வுகள் குறைந்து எமது பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வுகளைக் காணக்கூடியதாக இருக்கும்.

** செயற்பாடு : நேர்மறைச் சிந்தனை **// நேர்மறையாகச் சிந்திக்கும் மக்கள் தாம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் மிகவும் குறைவாகவே பதற்றத்தையும் துயரத்தையும் உணர்வதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவில் நித்திரைக்குச் செல்ல முன்பு அன்றைய தினத்தின் விடயங்கள் சிறப்பாக இருந்ததற்கான காரணங்களைச் சிந்தித்து குறித்துக்கொள்வதற்கு 10 முதல் 15 நிமிடங்களைச் செலவிடவும். ஆகக் குறைந்தது 3 காரணிகளையாவது கண்டு பிடியுங்கள். உதாரணமாக, அவை “இன்று காலை, எனது ஆசிரியர் என்னைப் புகழ்ந்தார்”, “எனது நண்பர் அக்கறையுடன் இருப்பதாகக் காண்பித்தார்” போன்ற சம்பவங்களாகவோ அல்லது ”நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்!” போன்ற ஒரு நிகழ்வாகவோ இருக்கலாம். இவ்விடயங்கள் சிறப்பாக இருந்ததற்கான காரணங்களை கண்டறிய முயற்சிசெய்து அவற்றுக்கான உங்களின் முயற்சிகளை அடையாளப்படுத்துங்கள்.


இரக்கம் காட்டுங்கள்


நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்களோ, அதாவது நாட்கள் நல்ல மற்றும் தீய நாட்களாக இருக்க வேண்டும் என்றோ, மேலும் தவறுகள் இடம்பெறக்கூடும் மற்றும் பூரணமாக இருக்க முடியாதென்றோ நீங்கள் உணர்ந்தாலும் அவ்வாறு உணர்வது சரியென உங்களுக்கே கூறிக்கொள்ளுங்கள். எந்நேரமும் “நான் மிகவும் சிறந்தவனாகவே” இருக்க வேண்டுமென நீங்கள் உங்களையே வலுக்கட்டாயப்படுத்த வேண்டாம். நீங்கள் கஷ்டமான மனவெழுச்சிகளை அனுபவிக்கும் போது நீங்கள் உங்களுக்கே இரக்கம் காட்டுங்கள். உங்களைப் பற்றிக் கூறுவதற்கு எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். “நேர்மறை சுய உரையாடல்” அதாவது, நீங்கள் உங்களுடன் நேர்மறையாகவே உரையாடுங்கள். உதாரணமாக :

“நான் இப்போது இதனை சிரமமாக உணர்ந்தாலும் நான் அதனை சமாளித்துக்கொள்வதால் அந்நிலைமையுடன் உடன்படுகிறேன். மேலும், இந்நிலைமை மாற்றமடையலாம்,”

“ஏதாவதொரு விடயம் பிழையாக இடம்பெறும் போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும், அது சாதாரண எதிர்வினை என உணர்கிறேன்”.

உங்களின் பலங்களும் நீங்கள் ஏற்கனவே சாதித்த விடயங்களும் கஷ்டமான காலங்களில் உங்களுக்குக் கைகொடுக்கும் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளவும். (நீங்கள் நேர்மறைச் சிந்தனைப் பயிற்சியை பரீட்சித்திருந்தால் அது உங்களுக்கு மேலும் எளிதாக இருக்கும் 😊)

அடுத்தவர்களுக்கு இரக்கம் காட்டுவது நாமும் மகிழ்ச்சியுடன் இருக்க எமக்கு உதவுமென உங்களுக்குத் தெரியுமா? அடுத்தவர்களுக்கு உதவுதல், பாராட்டுக்களைத் தெரிவித்தல் அல்லது தாராளமனப்பான்மையுடன் இருப்பது எமது உளநலத்தை மேம்படுத்தும். அத்துடன், அடுத்தவர்கள் எங்களுக்குக் காட்டும் அன்பை ஏற்று நன்றியுணர்வுடன் நடந்துகொள்வது எமது உள மற்றும் உடல் நலத்துக்கு உதவியாக இருக்கும்!


சமாளிப்பதற்கு ஆரோக்கியமற்ற வழிமுறைகளைத் தேர்ந்து எடுப்பதைத் தவிர்ந்துகொள்ளவும்


உங்களின் உணர்வுகள் கஷ்டமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் உங்களைப் பராமரித்துக்கொள்ள ஆரோக்கியமான வழிமுறைகளைக் கடைபிடிப்பது முக்கியமானது. அந்த வகையில்,

  • மதுபானம் அருந்துதல்.
  • புகைத்தல் அல்லது போதைப் பொருள் பாவனை.
  • அதிகளவு உணவு உட்கொள்ளல்.
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் மற்றும்
  • ஆபத்தான உறவுகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றை நோக்கி ஈர்க்கப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

இந்நடவடிக்கைகள் உங்களின் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்குமே அன்றி பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்காது.


தொடர்பு! தொடர்பு! தொடர்பு!


இயலுமான வரை குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்பினைப் பேணவும். நாம் வேண்டப்படாத ஏதேனுமொன்றை உணரும் போது ஏனையவர்களுக்கு முகங்கொடுக்காது ஒழிந்துகொள்ள வேண்டுமென ஒதுங்கியிருக்க முயற்சித்தாலும் இது நல்லதல்ல. அதற்குப் பதிலாக உங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற, நீங்கள் நம்பும் மக்களுடன் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். எந்நேரமும் அவர்களுடன் உரையாடுதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். உங்களுக்கு அதிகம் உரையாட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் நாம் விரும்புகின்ற, நம்புகின்ற மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதும் எமது உள நலத்துக்கு உதவியாக இருக்கும். சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், தொலைபேசி என்பவற்றைப் பயன்படுத்துங்கள் அல்லது அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு ஏதேனுமொரு இணைப்பு இல்லாவிட்டால் ஒன்றிணைந்து கழித்த நேரத்தை நினைவூட்டுங்கள்.

** செயற்பாடு : உங்களின் உதவி வலைப்பின்னல்//** இப்போது உங்களின் வாழ்வுடன் இணைந்த ஐந்து நபர்களைப் பற்றி சிந்திக்கவும். அவர்கள் எப்படி உங்களைப் பற்றி சிந்திக்க வைத்தனர்? அவர்களைப் பற்றி உங்கள் உணர்வுகள் எவ்வாறானது? நீங்கள் அவர்களைக் காணும் போது உங்களிடத்தில் சிறந்த உணர்வுகளை ஏற்படுத்துவோரைப் பற்றி அல்லது நீங்கள் மிகவும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தவர்களைப் பற்றி சிந்திக்கவும். மக்கள் எமது வாழ்க்கையில் வெவ்வேறு வகிபாகங்களை ஆற்றுகின்றனர். சிலர் எங்களுடன் வேடிக்கையாக இருக்கின்றனர் அல்லது எம்மோடு இணைந்து விளையாடுகின்றனர். மற்றும் சிலர் எமது இரகசிய விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தேவைப்படுகின்றனர். இன்னும் சிலர் எமது பாடசாலை வேலைகளில் எங்களுக்கு உதவி செய்திருக்கலாம். எனவே, உங்களின் உதவி வலைப்பின்னலில் இருப்போரை அடையாளப்படுத்த முயற்சிக்கவும்.


பிரச்சனைகளைக் கையாளுதல்


நாம் பிரச்சனைகளைப் புறக்கணித்துக்கொண்டிருந்தால் அவை எமது எண்ணங்களில் பெரிதாக வளரும். அது மேலும் பெரிதாக வளரும் போது அவற்றை சமாளிப்பதற்கான எமது ஆற்றல் மிகவும் குறைவு என நாம் உணரத் தொடங்குவதால், அது நமது உணர்வுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். நாம் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

நீங்கள் ஏதேனுமொரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தால், அதனை எவ்வாறு தீர்க்கலாமென அறியாதிருந்தால் கீழுள்ள எளிய படிமுறைகளை முயற்சி செய்யவும் ;

  1. பிரச்சினையைத் திட்டவட்டமாகவும் சுருக்கமாகவும் குறித்துக்கொள்ளுங்கள்.
  2. முதற்கட்டமாக பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து எல்லாவிதமான தீர்வுகளையும் யோசியுங்கள். இக்கட்டத்தில் தீர்வு நல்லதாக அல்லது தீயதாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. பின்பு, உங்களுக்கு என்ன செய்ய முடியுமென்றும் உங்களுக்கு யார் உதவ முடியுமென்றும் சிந்திக்கவும். உத்தி : தீர்வுகளைப் பட்டியலிட முடியாவிடின், உங்கள் நண்பருக்கு நீங்கள் என்ன தீர்வுகளை இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூறலாம் என யோசியுங்கள்.
  3. சாத்தியமான தீர்வுகளை முன்வைத்திருக்கும் பட்டியலிலிருந்து பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு மிகவும் பயனுள்ள மூலோபாயங்களைத் தெரிவுசெய்யவும். உத்தி : மிகவும் சிறந்த/ மிகவும் பயனுள்ள மூலோபாயங்கள் பொதுவாக உங்களிடம் இருக்கின்ற வளங்களால் செய்ய முடியுமானவை. மேலும், அவற்றினால் உங்களுக்கும் ஏனையவர்களுக்கும் மிகவும் குறைவான தீமைகளே இருக்கும்.
  4. நீங்கள் தீர்வினை(வுகளை) எவ்வாறு எப்போது நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறீர்கள் என திட்டமிட்டுக்கொள்ள ஒரு செயல்த் திட்டத்தினை விருத்திசெய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இதனை எப்போது செய்யலாமென ஒரு நாளையும் நேரத்தையும் தெரிவுசெய்துகொள்ளுங்கள். திட்டத்தினைக் குறித்துக்கொள்ளுங்கள். உத்தி : உங்களின் திட்டத்தைப் பற்றி குடும்ப உறுப்பினரின் நண்பர் ஒருவருக்கு எடுத்துக்கூறினால் அதனை செயற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்!
  5. மீளாய்வு நீங்கள் என்ன செய்தீர்கள் மற்றும் அது மூலப் பிரச்சனையில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதென சிந்தித்துப்பாருங்கள். அது உரிய தீர்வாக இல்லாதபட்சத்தில் அதற்கான காரணத்தை விளங்க முயற்சிக்க வேண்டாம். மீண்டும் தீர்வுகளை முன்வைத்திருக்கும் மூலப் பட்டியலுக்குச் சென்று இன்னொரு தீர்வு இருக்கின்றதா என அறிந்துகொள்ள முயற்சிக்கவும்.
  6. நீங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் வெற்றியடைந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் உங்களின் முயற்சிக்காக நீங்களை உங்களைப் பாராட்டுங்கள்!

மேலும் குறிப்பான உதவிக்காக கீழுள்ள தலைப்புக்களினூடாக மேலதிகமாக கற்றுக்கொள்ளவும் :


உதவியை நாடுதலும் கதைத்தலும்


கஷ்டமான உணர்வுகள், மனவழுத்தம், அச்சம் அல்லது கவலை என்பவற்றைத் தனியாக சமாளிப்பது எப்போதும் இலகுவானதல்ல. சிலவேளை, இந்த ஆலோசனைகள் மற்றும் சுய பாதுகாப்பு உத்திகள் இருந்தாலும் எமது உணர்வுகள் எம்மை மிகைத்துவிட முடியும். இறுதியில் எமது ஊக்கம் குறைந்துவிடும் அல்லது நாம் நம்பிக்கை இழந்துவிடுவோம். அப்போது நாம் வழமையாக அனுபவிக்கின்ற மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கலாம் என கருதுகின்ற விடயங்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டியேற்படும். மேலும், எம்மையே துன்புறுத்திக்கொள்ளும் சிந்தனைகள் அல்லது வாழ்க்கை இனி வாழத் தகுதியற்றது என்ற சிந்தனைகள் எம்மில் குடிகொள்ள முடியும். இச்சிந்தனைகள் பொதுவானவை. உங்களிடம் இவ்வாறான சிந்தனைகள் ஏற்பட்டதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. என்றாலும், நீங்கள் இவ்வாறு சிந்திப்பதாக இருந்தால் நீங்கள் நம்பும் ஒருவரை நாடி அவரிடம் ஆலோசனைகளைப் பெறுவது முக்கியமானது. அவ்வாறு கதைப்பதற்கு யாருமில்லை எனின் உங்களுக்கு அருகிலுள்ள ஆலோசனை சேவைகளை நாடுங்கள்.

முந்தையது அடுத்தது