Mental health awareness.png

உளநலம் பற்றிய பொதுவான கேள்விகள்

எவ்வாறு உளநலக் கோளாறினை அறிந்துகொள்ள முடியும்?

உளநலத்தை மிகவும் இலகுவாக அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், உளநலம் என்பது நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், உணர்கின்றோம், நடந்துகொள்கிறோம் என்பது பற்றியதாகும். அது எந்நேரமும் மாற்றமடைந்து கொண்டிருக்கும். எமது உளநலம் சிறந்ததாக இருக்கும் போது நாம் அடுத்தவர்களுடன் சேர்ந்திருப்பதை மகிழ்ச்சியான விடயமாக உணர்வதோடு எமக்கு புதிய மற்றும் கடினமான விடயங்களுக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும். எமது உளநலம் சிறப்பாக இல்லாதபட்சத்தில் நிலைமைகளை சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். நாம் மகிழ்ச்சியுறுகின்ற அல்லது எமது இயலுமை சரியென கருதுகின்ற விடயங்களைச் செய்ய முடியாது எமது சிந்தனைகளும் உணர்வுகளும் எம்மை தடுத்துக்கொள்ளும் போது உளநலப் பிரச்சனை விருத்தியடைகின்றது. இவ்வாறு நிகழுகையில் எமது உளநலத்துக்கு உதவி தேவைப்படும்.

எனது நண்பன் மனச்சோர்வுடன் இருப்பதாக உணர்கிறேன். நான், அவன்/ அவளுக்கு மோசமான நிலையை உணர்த்தாமல் எவ்வாறு உதவ முடியும்.

முதற்கட்டமாக நீங்கள் அவன் / அவளுடன் எப்போதும் இருப்பதை உணர்த்துங்கள். உங்களுடன் கதைக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டாம். என்றாலும், என்னுடன் கதைக்கவும் பேசவும் முடியுமென்பதை எடுத்துக்கூறவும். நீங்கள் அவர்களின் கதையை இரகசியமாக வைத்துக்கொள்வதாகவும், வதந்திகளைப் பரப்புவதில்லை என்றும் விளக்குங்கள்.

  • அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதாக நீங்கள் நினைத்தாலும் அவர்கள் கூறும் விடயங்களை வைத்து அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டாம். அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொண்டு நீங்கள் அவர்களின் விடயத்தில் அக்கறையுடன் இருப்பதாக எடுத்துக்கூறுங்கள்.
    • “அது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது
    • “இந்த விடயம் உங்ககளை சிரமத்துக்கு உட்படுத்துவதாக நான் உணர்கிறேன்."
    • "நீங்கள் இப்போது மிகவும் சோகமாக இருக்கிறீர்கள்
  • எது மிகவும் உதவியாக இருக்குமென கேட்டு அது மிகவும் இலகுவாக, அதாவது நீங்கள் விரும்பாத ஒரு திரைப்படத்தை பார்ப்பதாக இருந்தாலும் அவருக்காக அதனைச் செய்யுங்கள்
  • அவர்களுக்கு எதனைச் செய்ய வேண்டுமென கூற வேண்டாம். மாறாக,
    • “எவரேனுமொரு ஆசிரியரிடம் கூறுவது பற்றி சிந்தித்தீர்களா?” அல்லது
    • “கட்டணமற்ற ஆலோசனை முறை இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” போன்ற கருத்துக்களை எடுத்துக்கூறுகள்.
  • எந்நேரமும் தொடர்பில் இருக்கவும். உங்களின் நண்பர் பதிலளிக்காவிட்டாலும் கோபப்பட வேண்டாம். பொறுமையாக இருந்து நீங்கள் அவருக்காக காத்திருப்பதாகவும் அவருக்கு உதவி செய்வதற்கு ஆர்வத்துடன் இருப்பதாகவும் உணர்த்துங்கள்.
  • ஒருவரைக் கவனிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். உங்களின் நண்பர் தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ளலாம் என நீங்கள் கவலைப்படுவதாக இருந்தால் அல்லது உங்களால் சமாளிக்க முடியாதன நீங்கள் கருதும் பட்சத்தில் நம்பகமான பெரியவர் அல்லது தொழில் வல்லுநரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும்.

எனது குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உளநலக் கோளாறு இருக்கின்றது. அவ்வாறான நிலைமை எனக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் யாவை?

உங்கள் குடும்பத்தில் எவரேனுமொருவர் உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் மாத்திரம் நீங்களும் பாதிக்கப்படலாம் என்று கருத முடியாது. ஒரு சில ஆய்வுகளின் படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏதோ ஒரு வகையான உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதற்கான காரணத்தைப் பற்றி எங்களுக்கு முழுமையாக கூற முடியாது. ஒருவர் உளநலக் கோளாறினால் பாதிக்கப்படலாம் அல்லது பாதிக்கப்படாதிருக்கலாம் என ஒருவருக்கும் கூற முடியாது. சிறந்த சுய பாதுகாப்பு உத்திகளை செயற்படுத்துவது உளநலத்துக்கு உதவியாக இருப்பதுடன் அது எம் அனைவருக்கும் நல்லது.

எனது உளநலத்துக்கு எப்போது உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் எவ்வாறு அறிந்துகொள்வது எவ்வாறு?

நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்படுவதைப் போல எம்மில் அதிகமானோருக்கு எமது உளநலத்துடன் போராட வேண்டியிருக்கும்.

உங்களுக்கு ஆதரவும், உதவியும் தேவைப்படுவதைக் குறிக்கும் சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • நம்பிக்கையற்றது, பயனற்றது என்ற உணர்வுவாழ்க்கையின் சுபீட்சமான பக்கத்தினைக் காண போராடுதல் அல்லது நான் இருந்திருக்கக்கூடாது என விரும்புதல்.
  • அதிகமான தர்க்கங்கள் அல்லது சண்டைகளில் ஈடுபடுதல்
  • எந்நேரமும் அதிகம் கவலைப்படுதல், கோபப்படுதல் அல்லது பதற்றத்துடன் இருத்தல்.
  • உணர்வு மழுங்கியிருத்தல்ஒட்டுமொத்தமாகவே எவ்வித உணர்ச்சிகளும் இல்லாதிருத்தல், கட்டிலில் இருந்து எழுந்திருக்கவோ அல்லது நீங்கள் மகிழ்ச்சியுறும் விடயங்களில் ஈடுபடவோ முடியாதிருத்தல்.
  • உச்சக்கட்ட உயர்வு மற்றும் தாழ்வு அல்லது எண்ணங்கள் ஊசலாடுதல்.
  • உங்களையே உங்களுக்கு அமைதிப்படுத்த முடியுமென உணராதிருத்தல், ஒரு விளிம்பில் இருப்பதாக எண்ணுதல் அல்லது சிந்தனைகள் உங்களின் சுற்றுப்புறம் மற்றும் எண்ணங்களைச் சூழ ஓடிக்கொண்டிருத்தல்.
  • உணவு உண்ணும் முறைகளில் மாற்றங்கள்நீங்களாகவே பட்டினியிருத்தல், மிதமிஞ்சியளவு உண்ணுதல், உங்களையே நோயாளியாக்கிக்கொள்ளல்.
  • மறக்கடிப்பதற்கோ அல்லது உணர்வுகளை சமாளிப்பதற்கோ மதுபானம் அல்லது மரிஜுஆனா போன்ற போதைப் பொருட்களைப் பாவித்தல்.
  • ஏதாவதொரு நோக்கத்துடன் உங்களையே காயப்படுத்திக்கொள்ளல்.

உங்களுக்கு இவ்வாறான சிந்தனைகள், உணர்வுகள் அல்லது நடத்தைகள் இருப்பின் உதவியை நாடுவது முக்கியமானது. இது உங்களுக்கு உளநலக் கோளாறு இருக்க வேண்டுமென்பதற்கான அர்த்தமல்ல. என்றாலும், உங்களுக்கு ஓரளவு உதவி தேவைப்படலாம்.

உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்களா?

ஆம். உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுள் கணிசமானோர் அதிலிருந்து மீண்டு விடுவதுடன் அது சிலருக்கு ஒரு தனி நிகழ்வேயன்றி வேறில்லை. இன்னும் சிலர் மீண்டும் கோளாறினால் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், மிகச் சிலரே தங்களின் வாழ்நாள் முழுவதும் உளநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். உரிய நேரத்தில் உதவிசெய்வதன் மூலம் உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பெரிய சவால்களுமின்றி நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும்.

உளநலக் கோளாறுகள் ஆவிகள் அல்லது சாபத்தினால் ஏற்படும் ஒரு நிலைமையா?

உளநலப் பிரச்சனைகள் ஆன்மீக, மத அல்லது சூனியம் போன்ற காரணங்களால் ஏற்படுமென்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை. வீட்டுச் சூழல், ஆதரவு வலைப்பின்னல், உடற் சுகாதாரம் மற்றும் கிடைக்கும் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது. மக்கள் வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு தமது மத ரீதியான அனுஷ்டானங்களால் உதவி கிடைத்தாலும் உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பலவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன. எவரேனுமொருவர் உளநலப் பிரச்சனை அல்லது உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது சுகாதார தொழில் வல்லுநர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது.

உடற்பயிற்சி செய்வது உள நலத்துக்கு உதவுமா?

உடற்பயிற்சி உங்களின் எண்ணம், அவதானம் மற்றும் பலத்தை மேம்படுத்தும். அது உங்களின் வாழ்க்கையில் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். தொடர்ந்தேர்ச்சியான உடற்பயிற்சி உங்களுக்கு சிறந்த தூக்கத்தினைத் தரும். சிறந்த தூக்கம் உங்களின் எண்ணத்தைச் சீராக்கும். உடற்பயிற்சி உங்களின் உணர்வினைக் கட்டுப்படுத்த உதவுவதோடு உங்களைப் பற்றி நல்ல எண்ணத்தைத் தரும்.

களங்கப்படுதல் என்றால் என்ன? அது உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதிக்கும்?

களங்கப்படுத்துதல் என்பது உளநலக் கோளாறுடன் வாழ்தல் போன்ற வேறுபாடு காரணமாக அடுத்தவர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் நியாயமற்ற எதிர்மறை மனப்பாங்காகும். இதற்குப் பெரும்பாலும் மக்களுக்கு குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாக சரியான விளக்கமின்மை காரணமாக இருப்பதுடன், சிலவேளை மக்களுக்குக் கிடைக்கும் தவறான தகவல்களும் காரணமாக அமையலாம். இது உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்ட மக்கள் வித்தியாகமான நடத்தப்படுவதற்கும், அவர்களை அசாதாரணமாக மற்றும் மதிப்பற்றவர்களாக பார்க்கப்படுவதற்கும், சிலவேளை சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கும் காரணமாக இருக்கலாம். இதனால் உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தை உணர்வதுடன் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையலாம். இதன் விளைவாக, உளநலக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிச் சேவைகளை நாடாமலிருப்பதுடன் சமூக வாழ்வினைத் தவிர்த்துக்கொள்கின்றனர். இதனால், அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்வும் தடைப்படும்.

முந்தையது அடுத்தது